பிக்ஹுல் அகல்லியாத்... தொடர் - 6

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் இஸ்லாத்தைச் சீரழிப்பதற்கான புதிய ஃபிக்ஹ் தொடர் 06

யூசுப் (அலை) அவர்களின் வரலாறும், அவர்கள் எகிப்து நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியில் பங்குபற்றினார்கள் என்ற வாதமும்.

அல்குர்ஆன் நபி யூசுஃப்(அலை) அவர்களின் வரலாறை இவ்வாறு கூறுகின்றது:

“யூசுஃப், நாட்டின் கருவூலங்களுக்கு என்னை பொறுப்பாளராக்குங்கள். நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன் என்று கூறினார். மேலும் இவ்வாறு நாம் யூசுப்பிற்கு அந்த அதிகாரத்தை வழங்கினோம். அவர் அங்கே தாம் விரும்பும் எந்த இடத்திலும் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்.” (12:55-56)

எகிப்து அரசரின் இஸ்லாம் அல்லாத ஓர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதற்கு நபி யூசுஃப்(அலை) அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை நிரூபிப்பதற்கான முயற்சியில் இந்த திருவசனம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இன்றைய முஸ்லிம்களும் இதே போன்று அனுமதிக்கப்பட வேண்டும் எனச் சிலர் வாதிக்கின்றனர். இதற்கோர் ஆதாரமாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர்:

“மன்னனின் தீனின்படி (எகிப்து நாட்டு அரச சட்டப்படி) தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை. ஆனால் அல்லாஹ் அதனை நாடினாலே தவிர” (12:76)

நபி யூசுஃப் (அலை) அவர்கள் மன்னனின் சட்டங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரு திருடனை அடிமையாக்கி கொள்வதற்கு, நபி யஃகூப்(அலை) அவர்களின் ஷரீஆவைப் பயன்படுத்தி, தனது சகோதரர் மீது தீர்ப்பு வழங்க தன்னை அனுமதிக்கச் செய்வதற்காக மன்னனை ஏமாற்றியதாய் நிரூபிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

எனவே, இதில் குறிப்பிடப்படும் எதிர்மறையான புரிதலின்படி (மஃப்ஹூம் அல் முகாலஃபா), யூசுஃப்(அலை) தனது சகோதரரைத் தவிர மற்றவர்களுக்கு மன்னனின் சட்டப்படி தீர்ப்பு வழங்கியதாக மறைமுகமாக தெரிவிக்கப்படுகிறது என அவர்கள் வாதிடுகின்றனர். இந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி நபி யூசுஃப்(அலை) அவர்கள் இஸ்லாம் அல்லாத ஒரு ஆட்சியமைப்பில் அதிகாரம் வகித்ததையும், ஷரீஆ அல்லாத ஒன்றைக் கொண்டு தீர்ப்பு வழங்கியதையும் நிரூபிக்க முயல்வது, ஒரு நபியின் தவறு செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்ட தன்மைக்கு எதிராக கூறப்பட்ட ஓர் அவதூறாகும்.

எனவே, இந்த வாதம் மிகத் தெளிவான முறையில் பிழையானதாகும். இந்த வாதத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு முன்பு, நாம் யூசுஃப்(அலை) அவர்கள் ஒரு குஃப்ர் ஆட்சியமைப்பில் ஒருபோதுமே பங்குபற்றவில்லை என்பதை முதலில் நிரூபிக்க விரும்புகிறோம்.

நபி யூசுஃப்(அலை) அவர்கள் மீது மாசு கற்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அல்குர்ஆன் வசனத்தை நாம் கவனத்திற் கொண்டு பார்ப்போம்:

“யூசுஃப், நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள். நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன் என்று கூறினார். மேலும், இவ்வாறு நாம் யூசுஃப்பிற்கு அந்த அதிகாரத்தை வழங்கினோம். அவர் அங்கே தாம் விரும்பும் எந்த இடத்திலும் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்.” (12:55-56)

இந்த திருவசனத்துக்கு சரியான விளக்கங்கள் இரு விதமாக இருக்க முடியும்: முதலாவதாக, நபி யூசுஃப்(அலை) வெறுமனே எகிப்தில் அறுவடையாகும் பொருட்களைச் சேகரித்து அவற்றைச் சேமித்து வைப்பதற்கும், அந்த சேமிப்புக் குதங்களைப் பாதுகாப்பதற்கும் உரிய பொறுப்பாளராக இருந்தார்கள். இது ஒரு நிர்வாகப் பதவியே தவிர ஆட்சிப் பொறுப்புக்கான பதவி அன்று. இப்னு கதீர்(றஹ்) அவர்கள் இந்தக் கருத்தை இந்த திருவசனத்துக்கான தனது தஃப்ஸீரில் கூறுகிறார்கள்.

சுஹைபா இப்னு நுஆமாவும் இதே அபிப்ராயத்தைத்தான் சொல்கிறார்கள். இப்னு கதீர் அவர்களுடைய தஃப்ஸீரில் நபி யூசுஃப்(அலை), “அறுவடை செய்யப்பட்ட பொருட்களின் களஞ்சியசாலைகளுக்கு பொறுப்பாய் இருந்தார்கள். அவர்கள் அரசருக்கு முன்னறிவிப்பு செய்த பஞ்சக் காலத்தில் பயன்படுத்துவதற்காக, விளைபொருட்களை இந்தக் களஞ்சிய சாலைகளில் சேகரித்து வைப்பார்கள். அவர்கள் அதன் பாதுகாவலராக இருக்க விரும்பினார்கள். ஏனென்றால் இந்த அறுவடையை அறிவார்ந்த முறையிலும், சிறந்த வகையிலும், எல்லோருக்கும் பயன்படும் விதத்திலும் வழங்க முடியும் என்பதற்காக.” (இமாதுத்தீன் அலி அல் ஃபிதா இஸ்மாயில் இப்னு கதீர்- தஃப்ஸீர் அல்குர்ஆனுல் அழீம்)

இந்த அபிப்பிராயமானது, யூசுஃப்(அலை) அவர்கள் குஃப்ரைக் கொண்டு ஆட்சி செய்தார்கள் என்பதையோ, இந்த ஆட்சியமைப்பில் எந்த வகையில் பங்கு பற்றினார்கள் என்பதையோ எந்த விதத்திலும் சுட்டிக் காட்டுவதாயில்லை. மாறாக, யூசுஃப்(அலை) அவர்கள் வெறுமனே ஒரு நிர்வாகப் பதவியையே வகித்தார்கள் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

இவ்வாறு பதவி வகிப்பது இன்றைய கால கட்டத்திலும் கூட ஹராமானதன்று. எனவே இன்று குஃப்ர் ஆட்சியமைப்பில் சத்தியப் பிரமாணம் எடுத்து, இஸ்லாத்தை அரையும் குறையுமாக அமுல் செய்து, மனிதனின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்படுபவர்களைப் போன்று, ஒரு குஃப்ர் ஆட்சியமைப்பில் தீர்ப்பு வழங்குவதற்கும், ஈடுபடுவதற்கும் அப்பாற்பட்ட ஓரு விஷயமாகும்.

இரண்டாவது அபிப்பிராயம் என்னவென்றால், நபி யூசுஃப்(அலை) அவர்கள் முழு நாட்டினதும் முக்கிய பொருளாதாரப் பண்டங்கள் மீது அதிகாரம் கொண்டவர்களாக நாடு முழுமைக்குமான பொறுப்பு அவர்களிடம் கொடுக்கப்பட்டது என்பதாகும். இந்த அபிப்பிராயத்தை இமாம் அந்நபவி  குறிப்பிடுகின்றார்கள். அரசர், யூசுஃப் (அலை) அவர்களுக்கு கீழ்ப்பட்டவராயும், அவர்களது அனுமதியின்றி எந்தவொரு தீர்ப்பையும் வழங்க முடியாதவராயும் இருந்தார் என அவர்கள் கூறுகிறார்கள்.

அல் சுயூத்தி, அப்துர் ரஹ்மான் இப்னு ஜைத் இப்னு அஸ்லம் ஆகியோர் கூறியுள்ளதாக இப்னு ஜரீர் அல் தாபரி அறிவிக்கிறார்கள்: யூசுஃப்(அலை) அவர்களுக்கு அங்கு தான் விரும்பியதைச் செய்வதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டது. (அபூ ஜாஃபர் முஹம்மத் இப்னு ஜரீர் அல் தாபரி- ஜாமி அல் பயான் அன் தாவீல் அல்குர்ஆன்) மன்னர், உண்மையில் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகக் கூறும் சில அறிஞர்களின் கூற்று இதற்கு வலுச் சேர்க்கிறது. முஜாஹிதும் இதே கருத்தைக் கொண்டிருப்பதாக இப்னு கதீர் குறிப்பிடுகின்றார்கள்.

மேலும், குஃப்ர் ஆட்சியமைப்புகளில் நடைபெறும் தேர்தல்களில் ஈடுபடக் கூடியவர்களுடைய தந்திரோபாயங்களுடன் இதற்கு ஒப்புமை வழங்க முடியாது. கொடுங்கோல் அரசன் ஒருவன் தனது அதிகாரத்தை நீதி, நியாயமுள்ள ஒருவரிடம் கையளிக்க வேண்டும் எனக் கோருவது அனுமதிக்கப்பட்டது என்பதை மிகச் சாதாரணமாக நிரூபிக்கக் கூடியதாகவே குறித்த திருவசனம் அமைந்திருக்கிறது என இமாம் அந்நஸஃபி குறிப்பிடுகிறார்கள். இதன் கருத்து, முழு அதிகாரமும் கைமாறுவதால் அரையும் குறையுமான ஓர் அமுலாக்கத்தை இது குறிப்பிடுவதாகக் கருத முடியாது என்பதாகும்.

ஒரு குஃப்ர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதையோ அல்லது இஸ்லாத்தை அரையும் குறையுமாக அமூலாக்குவதையோ இந்தத் திருவசனம் அனுமதிப்பதாக கருத்து கொள்ள முடியாது. இது உண்மையில் நினைத்தும் பார்க்க முடியாத, நடைபெற முடியாத ஒன்றாகும். குர்ஆனுக்கு இந்த முறையில் விளக்கம் அளிப்பது என்பது, இதனை மிகத் தெளிவாகத் தடை செய்யும் வேறு பல தீர்க்கமான வசனங்களுக்கு முரண்பாடானதாகும். அந்த வசனங்கள் அவ்வாறு செய்யக் கூடிய ஒருவனை ஒரு காஃபிர் என்றோ, ஃபாசிக் என்றோ, ழாலிம் என்றோ குறிப்பிடுகின்றன:

“மேலும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அத்தகையோர் தாம் நிராகரிப்பவர்களாவர்.” (5:44)

“இன்னும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அத்தகையோர் தாம் அநியாயக்காரர்களாவர்.” (5:45)

“இன்னும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அத்தகையோர் தாம் பாவிகளாவர்.” (5:47)

தவறுகளிலிருந்து அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்ட நமது நேசத்துக்குரிய நபி யூசுஃப்(அலை) அவர்களுடன், இத்தகைய தன்மைகளை இணைத்து பார்ப்பதென்பது நிச்சயமாக சாத்தியமான ஒன்றன்று.

இத்தகைய ஓரு கருத்தோட்டம், அவர்கள் சிறையில் இருக்கும் போது தனது இரு நண்பர்களையும் நோக்கிக் கூறும், அல்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ள நபி யூசுஃப்(அலை) அவர்களின் சொந்தக் கூற்றுக்கும் முரண்பாடானதாகும்:

“ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்குமில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறியாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாதிருக்கின்றனர்” (12:40)

இந்தத் திருவசனத்திலிருந்து யூசுஃப்(அலை) அவர்கள், உண்மையில் அல்லாஹ்வின் ஷரீஆவைக் கொண்டு ஆட்சி செலுத்தாத ஒருவன், தனக்கென சொந்த தீனை ஏற்படுத்திக் கொண்டான் என்பதையே நம்பினார்கள் என்பது தெளிவாகிறது. இது அவர்களின் கூற்றான, “இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறியாகும் என்பதைக் கொண்டு எடுத்துக் காட்டப்படுகிறது.

மிகத் தெளிவாக கூறுவதென்றால், யூசுஃப் (அலை) அவர்களின் கருத்துப்படி, அல்லாஹ்வினுடைய ஷரீஆவின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதும் ஆட்சி செய்வதும், அகீதா (அடிப்படைக் கொள்கை), தௌஹீத் --அல்லாஹ்வின் ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை கொள்வது, அல்லாஹ்வின் தீர்ப்புக்கு கட்டுப்படுவது என்பவற்றைச் சார்ந்த ஒரு விஷயமாகும்.

அல்லாஹ்வின் நேரான வாழ்க்கை நெறியைப் பின்பற்றாத ஒருவனை ஒரு முஷ்ரிக் (இணைவைப்பவன்) என வர்ணிக்கும் யூசுஃப்(அலை) அவர்களின் வார்த்தைகளுக்கு, இவ்வாறுதான் இப்னு கதீர் அவர்கள் விளக்கமளிக்கிறார்கள். இப்னு கதீர் அவர்களுடைய விளக்கம் பின்வருமாறு: “இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை வழியாகும்” என்பதன் கருத்தாவது, அல்லாஹ்வின் இந்த தௌஹீத், அவனிடத்தில் மட்டுமே வணக்க வழிபாடுகளின் எல்லாச் செயல்களையும் சமர்ப்பிப்பது... என்பவைதான், அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்ட சரியான, நேரான தீனாகும்.

அதற்காக ஆதாரங்களையும், நிரூபணங்களையும் அவன் தான் விரும்பியவற்றிலிருந்து வெளிப்படுத்துகிறான். “ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாதிருக்கின்றனர்” என்பது, அவர்களில் பெரும்பாலோர் ஏன் முஷ்ரிக்குகளாக இருக்கின்றனர் என்பதை உணர்த்துகின்றது.” (இமாதுத்தீன் அலி அல் ஃபிதா இஸ்மாயில் இப்னு கதீர் - தஃப்ஸீர் அல்குர்ஆனுல் அழீம்)

யூசுஃப் (அலை) அவர்கள் தனது சகோதரரின் மீது மன்னருடைய சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவில்லை என்பதை விபரிக்கின்ற போது அல்குர்ஆன், மன்னருடைய சட்டத்தை சுட்டிக்காட்டுவதற்கு “தீன்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மன்னருக்கு ஒரு தீன் இருந்தது யூசுஃப்(அலை) அவர்களுக்கு இன்னொரு தீன் இருந்தது:

“மன்னனின் தீனின்படி (அதாவது, எகிப்து நாட்டு அரசுச் சட்டப்படி) தம் சகோதரரை(ஓர் அடிமையாக)ப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை - ஆனால் அல்லாஹ் அதனை நாடினாலே தவிர!” (12:76)

முஸ்லிம்களே! இது எவ்வாறு இருக்க முடியும்? நமது நபி யூசுஃப்(அலை) அவர்கள், சிறையில் தனது நண்பர்களிடம், அல்லாஹ்வின் ஷரீஆதான் முற்றிலும் சரியான, நேரான தீனாகும் என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறிவிட்டு, மற்றொரு சந்தர்ப்பத்தில் அரசருடைய தீனைப் பின்பற்றுகிறார்கள்? இத்தகைய ஒரு அவதூறிலிருந்து அல்லாஹ்விடத்திலிருந்து நாம் பாதுகாப்புத் தேடுகிறோம்.

இமாம் நஸஃபி, இப்னு கதீர், இமாம் அஸ் சவ்கானி ஆகியோர் இந்தத் திருவசனத்தைப் பற்றி கூறும் போது, யூசுஃப்(அலை) தனது சகோதரருக்கு, யஃகூப் (அலை) அவர்களின் ஷரீஆவின்படி தீர்ப்பளித்தார்கள் என்பதே இதன் கருத்தாகும் எனத் தெரிவிக்கின்றார்கள். இந்த திருவசனத்தில் கூறப்படும் எதிர்மறையான புரிதல்(மஃப்ஹூம் முகாலஃபா) என்பது யூசுப்(அலை) ஏனையவர்கள் மீது மன்னரின் சட்டத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்கியதாகச் சுட்டிக்காட்டுவதாக சிலர் வாதிடுகின்றனர்.

மஃப்ஹூமுல் முகாலஃபா என்பது எண்ணிக்கை(அதத்), வர்ணனை(வஸ்ஃப்) என்பவற்றைக் கொண்டு, அவை மிகத் தெளிவான மூலங்களுக்கு முரண்படாத வகையில் இருந்தால், ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முறையாய் இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் அது ஏற்புடையதன்று. இந்தக் குறிப்பிட்ட வசனத்தில் வரும் மஃப்ஹூம், மஃப்ஹூம் அல் லகப் என அறியப்படுகிறது.

அதாவது ஒரு பெயர்ச் சொல்லிலிருந்து அல்லது ஒரு பெயரிலிருந்து (அதாவது யூசுஃப்(அலை) அவர்களின் சகோதரரிலிருந்து) ஓர் எதிரான கருத்தைக் கொண்டதாகும். ஆயினும் கீழே குறிப்பிடப்படும் விளக்கத்துக்கமைய இந்தப் பலவீனமான மஃப்ஹூம் வகையின் பயன்பாடு, இந்தச் சூழ்நிலையில் ஏற்புடையதன்று. இதனை அபுபக்கர் அல் தகாக்கும், இப்னு ஃபாரூக்கும் ஒப்புக் கொள்கின்றார்கள்.

இந்த வகையான பகுத்தாய்தலை விளக்குவதற்கு ஒரு சாதாரணமான உதாரணம் தரப்படுகிறது: “நான் ஜைதைக் கண்டேன்” என்ற கூற்று, இந்த வகையான மஃப்ஹூமைப் பயன்படுத்தி விளங்கப்பட்டால், அதன் கருத்து, “ஜைதை அன்றி வேறு யாரையும் காணவில்லை என்றிருக்கும்”.

இந்த உதாரணத்தில், யூசுஃப் (அலை) தனது சகோதரரை நபி யஃகூப் (அலை) அவர்களின் ஷரீஆவைக் கொண்டு தீர்ப்பளித்ததாகக் கூறும் அல்லாஹ்வின் திருவசனம், அவர்கள் மற்றவர்களை மன்னருடைய சட்டத்தின்படி தீர்ப்பளித்தார்கள் என்ற ஒரு கருத்தைத் தருகிறது. இஃது உண்மையில் மிக பலவீனமான மஃப்ஹூம் முகாலஃபா வகைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வகையான பகுத்தாய்தலைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு, மொழிரீதியாகவோ, சட்டரீதியாகவோ, பகுத்தறிவுரீதியாகவோ, எந்தவொரு நியாயக் காரணமும் கிடையாது என இமாம் அஷ்ஷவ்கானி குறிப்பிடுகிறார்கள்.

இமாம் அவர்கள் தொடர்ந்து அது பற்றிக் குறிப்பிடும் போது, “நான் ஜைதைக் கண்டேன்” எனச் சொல்லக் கூடிய ஒருவர், அரபிகளின் பேச்சு வழக்கின்படி “ஜைத் அல்லாத வேறு எவரையும் நான் பார்க்கவில்லை” என்ற கருத்தை தெரிவிப்பவராக இருக்கமாட்டார். இந்தக் கருத்து சரியானது என மூலத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தால் ஆதாரமும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் (முஹம்மது இப்னு அலி அல் செவ்கானி - இர்ஷாத் அல் ஃபுஹூல் இலா தஹ்கீக் அல் ஹக் மின் இல்ம் அல் உசூல்)

இந்த வகையான மஃப்ஹூம் ஏற்புடையது என்றாலும் கூட, அது எந்த வகையிலும் மேற்குறிப்பிட்ட உதாரணத்தில் பயன்படுத்தப்பட முடியாது. இஃது ஏனென்றால், மஃப்ஹூமுல் லகபை ஆதரிப்பவர்கள் கூட, இதன் பயன்பாடு வெளிப்படையான மூலங்கள் போன்ற சில நிபந்தனைகளுடன் முரண்படக் கூடாது என்பதை ஏற்றுக் கொண்டனர். எனவே, சர்ச்சைக்குரிய இந்தத் திருவசனத்தின் மீது இந்த வகையான மஃப்ஹூமைப் பயன்படுத்துவது என்பது குஃப்ரினால் வழங்கக் கூடிய தீர்ப்புகளைத் தடைசெய்கின்ற பல தெளிவான அல்குர்ஆன் வசனங்களுக்கு முரண்பாடாக அமைந்திருக்கிறது.

“ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை (12:40)

என்ற யூசுஃப் (அலை) அவர்களின் சொந்த வார்த்தைக்கும் இது முரணானதாகும். அப்படிப்பட்ட கருத்தைக் கொள்வது என்பது, அல்லாஹ்வின் மாபெரும் நபி ஒருவருக்கு எதிரான, மிகவும் கொடூரமான, வெறுக்கத்தக்க அபாண்டமாகும். அஃது அறிவுக்கு பொருத்தமற்ற ஒரு கருத்தையே தரமுடியும் என்பதினாலேயே, அல் தகாக், இப்னு ஃபாரூக் ஆகியோரும் கூட இங்கு மஃப்ஹூமுல் லகப் பயன்படுத்தப்படுவதை ஏற்க மறுத்திருக்கிறார்கள். எனவே இந்த சர்ச்சையில், நாம் அதனை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.

மேலே நாம் கூறியவை அனைத்தும், அவதூறுகளிலிருந்து நபி யூசுஃப் (அலை) அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு மாத்திரமேயாகும். வாதத்தில் உள்ள அடிப்படையான பிழை என்னவென்றால், யூசுஃப்(அலை) அவர்கள் இஸ்லாம் அல்லாத ஓர் ஆட்சி முறையில் பங்கு கொண்டார்கள் என்பதும், அதன் விளைவாக அது நமக்கு அனுமதிக்கப்பட்டது என்பதும்தான்.

யூசுஃப்(அலை) அவர்களின் ஷரீஆ, நாம் பின்பற்றுவதற்கு உரியது என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. இது ஓரு பலவீனமான விதிமுறையாகும். எனவே யூசுஃப்(அலை) அவர்கள் அரசருடைய தீனைக் கொண்டு நடாத்தப்பட்ட ஓர் ஆட்சி முறையில் பங்கு கொண்டிருந்தாலும் கூட (இது முற்றிலும் நினைத்துப் கூடப் பார்க்க முடியாத ஒன்று), இது எந்த வகையிலும் முஸ்லிம்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழப் போவதில்லை. ஏனென்றால் முஸ்லிம்கள், நபிமார்களில் இறுதியானவர்களான முஹம்மத்(ஸல்) அவர்களின் ஷரீஆவினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எவ்வாறு இருந்த போதிலும், சில அறிஞர்கள் இந்த விதிமுறையை ஏற்றுக் கொள்கின்ற அதே நேரத்தில், அதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளை நிர்ணயிக்கிறார்கள்: “நமது முந்தைய (நபிமார்களின்) ஷரீஆக்கள், முஹம்மத்(ஸல்) அவர்களினால் கொண்டு வரப்பட்ட ஷரீஆவிற்கு முரண்படாத வரைக்கும், நமக்கும் ஒரு ஷரீஆவாகத் திகழ்கிறது.” (அபுபக்கர் முஹம்மத் இப்னு அபீ ஸஹ்ல் அஹ்மத் அல் சரக்ஷி- உஸூல் அல் சரக்ஷி)

இந்த விஷயத்தில் ஈர் அபிப்பிராயங்கள் மட்டுமே இருக்கின்றன. இதனைத் தவிர வேறு எந்த ஓர் அபிப்பிராயத்தையும் வேறு எந்த அறிஞர்களும் கொண்டிருக்கவில்லை. முந்திய ஒரு நபியினுடைய சட்டம் அல்லது தீர்ப்பு, முஹம்மத் (ஸல்) அவர்களினால் கொண்டு வரப்பட்ட ஷரீஆவை ஒதுக்கித் தள்ளிவிடும் எனக் குறிப்பிடுவது எள்ளி நகையாடப்பட வேண்டிய ஒன்றாகும்.

தங்களின் செயல்களை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் முயற்சிக்கின்ற, பயன்படுத்துகின்ற  வேறெந்த பலவீனமான, ஆனால் ஏற்கத்தக்க விதிமுறைகளும் கூட, இவ்வாறே அமையும். இவற்றுள் சில, மகாசிதுஷ் ஷரீஆ - ஷரீஆவின் நோக்கங்கள், மூலங்களின் உள்ளார்ந்த கருத்துக்கள், மஸாலிஹ் அல் முர்ஸலா(பொது நலன்) அல்லது இரு தீமைகளுக்குள் குறைந்த தகுதியை உடையது என்பனவாகும். இவற்றில் எதனையும், மிகத் தெளிவான ஷரீஆ மூலங்களுக்கு முரண்படும் விதத்தில் பயன்படுத்த முடியாது.

இமாம் கஸ்ஸாலி, ஆமிதி மற்றும் இப்னு ஹாஜிப்  போன்றோர் ஒன்றாக (இஜ்மா-அறிஞர்களின் ஏகோபித்த முடிவு) அறிவித்திருக்கிறார்கள்: அஃதாவது, “எந்த ஒரு பொதுவான ஆதாரமும், ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தை முதலில் தேடிப் பார்க்காமல், ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காகப் பயன்படுத்தப்பட முடியாது.” எனவே பலவீனமான, ஆனால் ஏற்புடைய விதிமுறைகளான “முந்தைய ஷரீஆக்களில்” இருந்து இரண்டாந்தரமான சட்டவாக்க மூலங்களை நாடிப் போவதற்கு முன்,  நபி (ஸல்) அவர்களினால் கொண்டு வரப்பட்ட குறிப்பிட்ட ஆதாரம் கண்டிப்பாக நாடப்பட வேண்டும்.

நம் முன்னுள்ள விஷயத்தில் வலுவான அல்லது பலவீனமான எந்தவோர் அபிப்பிராயம் பின்பற்றப்பட்டாலும், யூசுஃப் (அலை) அவர்களின் செயல்முறைக்கும் இன்று குஃப்ர் ஆட்சி முறைகளில் பங்கு கொள்வதற்கும் எந்தவோர் ஒப்புமையும் காணப்பட முடியாது. இத்தகைய நடவடிக்கையானது முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஆவிலிருந்து முரண்படுவதாகும். பின்வரும் திருவசனத்தில் குறிப்பிடப்படுவதைப் போன்று, பல திருவசனங்களில் அல்குர்ஆன் இந்த கருத்தை முன்வைக்கிறது:

“எனவே நபியே! அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கு ஏற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள். அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள். அவர்கள் உம்மைக் குழப்பத்தில்  ஆழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை)  இம்மியளவும் நழுவச் செய்திடாவண்ணம், நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக!” (5:49)

யூசுஃப்(அலை) அவர்களின் வரலாற்றை நாம் தொகுத்து நோக்கினால், அவர்கள் அந்த ஆட்சி அமைப்பில் ஒரு நிர்வாகியாக அன்றி ஆட்சி அதிகாரம் உள்ளவராக பங்கு கொள்ளவில்லை என்றிருந்தாலும் சரி, அல்லது அவர்கள் முழு ஆட்சி அதிகாரத்துக்கும் பொறுப்பாளராக இருந்தார்கள் என்றிருந்தாலும் சரி, அல்லது அவர்கள் கொண்டு வந்த ஷரீஆ இன்று ஏற்புடையதல்ல என்றிருந்தாலும் சரி, அல்லது முஹம்மத்(ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஆவிற்கு முரண்படாத வரையில் யூசுஃப்(அலை) அவர்களின் ஷரீஆ ஏற்புடையதாக இருந்தாலும் சரி - இவை அனைத்தும் உண்மையாகவும், சரியாகவும் தோற்றமளிக்கின்ற அபிப்பிராயங்களாக இருந்தாலும் கூட, அவை அனைத்தும் குஃப்ர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதை எந்த வகையிலேயும் நியாயப்படுத்துவதாக அமையவில்லை.

அப்படிப்பட்ட ஒரு செயல்முறை அல்லாஹ்வுக்கு எதிரான மிகப் பெரிய வரம்பு மீறலாகும். ஏனென்றால் அது குஃப்ரைக் கொண்டு தீர்ப்பு வழங்குவதையும், சட்டங்களை இயற்றுவதையும் குறிப்பிடுவதாகவே கருதப்படும். இதில் நம்பிக்கை வைத்த ஆட்சியாளர் ஒரு காஃபிராகக் கருதப்படுவார். அவர் அதில் நம்பிக்கை கொள்ளவில்லை என்றாலும்கூட அவர் ஓர் அக்கிரமக்காரராகவோ அல்லது ஒரு பாவியாகவோதான் கருதப்படுவார்.

- சிந்தனை போரம்

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!