முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!


முஹம்மத் அல் ஃபாத்திஹ்..!
(கி.பி.1451 – 1481)


"காண்ஸ்டாண்டிநோபிள்
நிச்சயம் ஒரு வீரனால் வெற்றி கொள்ளப்படும். அதை வெற்றி கொள்ளும் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த சேனைதான் சிறந்த சேனை". (முஸ்னத் அஹ்மத்)

அம்ர் இப்னு ஆஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அவரிடம் 'காண்ஸ்டாண்டிநோபிள்' மற்றம் ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?' என வினவப்பட்டது. அதற்கவர் 'ஹிர்கல் மன்னனின் நகரம்    காண்ஸ்டாண்டிநோபிள் தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)

7வது உஸ்மானிய ஆட்சியாளரான 2ம் முராதுக்கு கி.பி 1432ல்(ஹி-835) முஹம்மத் எனும் ஒரு ஆண் மகன் பிறந்தார். சுல்தான் 2ம் முராத் தனது மகனை கண்காணித்துப் பராமரிக்கும் பொருப்பை 'ஷேக் ஆக் சம்சுதீன்' எனும் அறிஞரிடம் ஒப்படைத்தார். 

அந்தவகையில் முஹம்மத் இவரின் உதவியுடன் அல்குர்ஆன், அல்ஹதீஸ்,  இஸ்லாமிய சட்டக்கலை, விளையாட்டு, கணிதவியல், விண்ணியல், போர் தந்திரம், வரலாறு போன்றவற்றையும் அரபு,  பாரஸீகம், துருக்கி, லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் என்பவற்றையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார். இயற்கையிலேயே அன்பு, பணிவு, மார்க்கப் பற்று போன்ற குணங்களையும், கவித்துவத்தில் புலமையும் பெற்றிருந்த இவர் சிறுவயது முதல் தனது தந்தையுடன் போர்களிலும் பங்குப்பெற்றிருந்தார்.

கி.பி 1444ல் சுல்தான் 2ம் முராத் 12 வயது மாத்திரமே கொண்ட தனது மகன் 'முஹம்மதை'  உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் சுல்தானாக நியமித்து விட்டு அணைத்துப் பொருப்புக் களிலிருந்தும் ஒதுங்கி தூர இடம் ஒன்றிற்கு சென்று வாழத் தொடங்கினார். முஹம்மதோ அறிவு, வால் வீச்சு, குதிரை ஓட்டம், போர் பயிற்சி என்று அணைத்திலும் சிறந்து விளங்கினும் போதிய அணுபவ மற்றவராக இருந்தார். 

இந்நிலையில் ஆட்சிப் பொருப்பையேற்று சில மாதங்களே கடந்த நிலையில், கலீஃபா முராத் இல்லாததையறிந்து, ரோமப் பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பை மேற்கொண்டது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக இருந்ததால் தனது தந்தையின் உதவியை நாட முடிவு செய்தார்.

 “விரைவாக வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினார்” தந்தையிடமிருந்து 'இப்பொழுது நீ தான் சுல்தான், படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் வர முடியாது' என்று பதில் வந்தது. இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு அமைந்தது. “ஆம் நான் தான் சுல்தான். இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக வந்து படையை வழி நடாத்துங்கள்..!”. என்று.

சுல்தான் முஹம்மதின் ஆணையையேற்று 2ம் முராத் திரும்பி வந்து படைக்கு தலைமை தாங்கியதுடன் ரோமர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். போர் வெற்றிக்குப் பின் கி.பி 1446ல் சுல்தான் முஹம்மத் தனது தந்தையான 2ம் முராதை மீண்டும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் சுல்தானாக நியமித்தார். கி.பி 1451ல் 2ம் முராத் மரணித்ததன் பின் தனது 18வது வயதில் மீண்டும் சுல்தானாக பதவியேற்றார். 

இந்த சிறுவன் தான் வரலாற்றில் சுல்தான் 'முஹம்மத் அல் ஃபாத்திஹ்' என்று போற்றப்படும். நபி(ஸல்) அவர்களால் முன்னறிவுப்பு செய்யப்பட்ட காண்ஸ்டாண்டிநோபிளை  பைஸாந்தியரிடமிருந்து கைப்பற்றிய மாவீரனாகும். ஆட்சிக்கு வந்ததும் நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்த குறித்த சிறப்பை அடையும் பொருட்டு, முஹம்மத் அல்ஃபாத்திஹ் காண்ஸ்டாண்டிநோபிளை
வெற்றி கொள்வதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் தொடங்கினார். 

அந்தவகையில் தனது தளபதிகளை வரவழைத்து ஆலோசனைகளைப் பெற்று யுத்தத்திற்க்கான வியூகங்களை வகுத்தார், பெரும் படையொன்றை திரட்டி அவர்கள் மத்தியில் ஜிஹாதின் மகிமையையும், நபியவர்களின் பொன்மொழியையும் சுட்டிக்காட்டிகாண்ஸ்டாண்டிநோபிளை
வெற்றி கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கி அவர்களை ஆர்வமூட்டினார். 

திறமை மிக்க பொறியியலாளர்களைக் கொண்டு யுத்ததிற்கு தேவையான பீரங்கிகளையும், ஏனைய ஆயுதங்களையும், போர்க் குதிரைகளையும், படகுகளையும் தயார் செய்தார். போருக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்ததன் பின் கி.பி 1453ல் சுல்தான் முஹம்மத் தலைமையில் சுமார் 2,65,000 பேரைக் கொண்ட இஸ்லாமியப் படை பைஸாந்தியப் பேரரசின் கோட்டை காண்ஸ்டாண்டிநோபிளை நோக்கி புறப்பட்டது. 

கோட்டையை அன்மித்ததும் சுல்தான் முஹம்மத் தன் சேனைப் படைகள் முன் சென்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ள போரில் பின்பற்றப்பட வேண்டிய விழுமியங்கள் பற்றி உபதேசங்களை நிகழ்த்தியதுடன் வெற்றி அல்லது வீரமரணம் என்ற கொள்கையை அவர்களின் உள்ளங்களில் ஆழமாக பதித்தார். பின் தன் படையை பிரித்து பல பகுதிகளிலும் முற்றுகைக்காக நிறுத்தி வைத்தார். அவர்களது படகுகளும் கடல் வழியாக வந்து சேர்ந்தன.

கோட்டையை முற்றுகையிட்ட பின் சுல்தான் முஹம்மத் 'காண்ஸ்டாண்டிநோபிளை தம்மிடம் ஒப்படைத்து நல்லாட்சி புரிய ஒத்துழைக்குமாறு அல்லது ஆள்வரி (ஜிஸ்யா) செலுத்தி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் நல்லாட்சி புரியுமாறும் வேண்டி' காண்ஸ்டாண்டிநோபிள் மன்னனுக்கு நிருபம் ஒன்றை அணுப்பினார். அதைப்பார்த்த கோட்டை மன்னன் ஆவேசப்பட்டு இஸ்லாமியப் படைக்கெதிராக போர் அறிவித்தான். 

முஸ்லிம்களின் படையெடுப்பை முற்கூட்டியே அறிந்து கொண்ட அவன் ஐரோப்பியரிடம் படையுதவியையும் வேண்டி பெற்றுக்கொண்டான்.
இரு தரப்பாருக்கிடையிலும் போர் தொடங்கியது. ஆரம்பத்தில் முஸ்லிம்களால் கோட்டையை சூழ்ந்திருந்த நீர்ப்பரப்பை தாண்டி முன்னேற முடியாமலிருந்தது. எனினும் சுல்தான் முஹம்மதின் சாமர்த்திய உத்தியின் மூலம் இஸ்லாமிய படை நீர்ப்பரப்பை தாண்டி கோட்டையை அடைந்து வெற்றி வாகை சூடினர். 

இதனால் மக்கள் வெற்றியாளர் எனும் பொருளைத்தரும் 'அல் பாதிஹ்' எனும் சிறப்புப் பெயர் கொண்டு அவரை அழைக்கத் தொடங்கினர்.
முஸ்லிம் படையின் வெற்றி குறித்து செய்தியறிந்த காண்ஸ்டாண்டிநோபிள் மக்களில் அதிகமானோர், அச்சத்தினாலும் பீதியினாலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர். 

முஹம்மத் அல் பாதிஹ், அவர்கள் முன் தோன்றி தான் அவர்ளுக்கெதிராக எதையும் செய்யப்போவதில்லை என்று எடுத்துக்கூறி முன்னர் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோன்றே தங்களின் வீடுகளுக்குச்சென்று நிம்மதியாக சந்தோஷமாக வாழுமாறு அறிவித்தார். 

தங்களின் நாட்டிற்கு எதிராக படையெடுத்து வந்தவர்களா இப்படிக் கூறுகிறார்களென வியப்படைந்த அம்மக்கள், தமது உயிர்களுக்கும் உடமைகளுக்கும் எவ்வித ஆபத்தும் நேராததைக் கண்டு பூரிப்படைந்தனர்.

முஹம்மத் அல்ஃபாத்திஹ் வெற்றி கொள்ளப்பட்ட காண்ஸ்டாண்டின் நோபிளின் பேரளவிலான ஆட்சிமுறையை மாற்றியமைத்ததுடன் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். 

கைதிகளிடம் இரக்கம் காட்டினார், தனது சொந்தப் பணத்திலிருந்து அவர்களுக்குத் செலவுசெய்தார், ஏழை மக்களுக்கு உதவினார், அறிவியல் வளர்ச்சிக்காகப் பல பாடசாலைகளையும், வாசிக சாலைகளையும்  அமைத்தார், அங்காடிகளையும் வைத்திய சாலைகளையும் கட்டினார்.

பூந்தோட்டங்களையும் நீர்த்தேங்கள் மற்றும் நீர்க்குளங்களையும் அமைத்து நகரை அழகுபடுத்தினார், பாதைகளைப் புணரமைத்து தெருவிளக்குகளைப் பொருத்தியதுடன் புதுச்சாலைகளையும் அமைத்தார். இவ்வாறு பல்வேறு பொதுப்பணிகளைச் செய்து புதியதோர் நாகரீகத்தையும் கலைச் செழுமையையும் அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களது உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்தார். 

அங்கு வாழ்ந்த அதிகமான மக்கள் முஸ்லிம்களின் நல்ல பண்புகளையும்  இஸ்லாத்தின் உன்னத விழுமியங்களையும் கண்டு இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர். சுல்தான் முஹம்மத் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக காண்ஸ்டாண்டி நோபிளை மாற்றி அதற்கு 'இஸ்லாம் பூல்'( இஸ்லாமிய நகரம்) எனப்பெயரிட்டார். இதுவே காலப்போக்கில் மறுவி இன்று இஸ்தான்பூல் என்றழைக்கப்படுகிறது.

காண்ஸ்டாண்டி நோபிளின் வெற்றிக்குப் பின் செர்பியா, ரொமேனியா, அல்பேனிய, கிரீஸ், பொஸ்னியா ஹர்ஸகோவியா போன்ற பால்கனின் பெரும்பகுதிகளும் கரமான் துருக்கியின் ஒரு பகுதியும் வெற்றிகொள்ளப்பட்டன. அடுத்த கட்டமாக மற்றுமொறு பெரும் வல்லரசாகக் காணப்பட்ட ரோமப் பேரரசின் தலைநகரான இத்தாலியைக் கைப்பற்ற சுல்தான் முஹம்மத் அல்பாதிஹ் உளப்பூர்வமாக தயாராகி அதற்கான ஆயத்தங்களை திட்டமிட்டு முன்னெடுத்தார். 

அதற்காக வேண்டி பெரும் படை ஒன்றை திரட்டினார், தேவையான ஆயுதங்களையும், தளபாடங்களையும் தயார் செய்தார். பின் இத்தாலியின் நகரான “ஒட்ரான்ட்” பகுதியை அன்மித்த இடத்தில் பெருந்தொகையான யுத்த பீராங்கிகளை கொண்டு நிருத்தினார். இதையறிந்த ஐரோப்பியர் தமது வரலாற்றுப் பாரம்பரியமிக்க ரோம் நகரம் சுல்தான் முஹம்மத் அல்ஃபாத்திஹிடம் வீழப் போவதை எண்ணி பெரும் அச்சம் கொள்ளத் தொடங்கினர்.

எனினும் துரதிஷ்ட வசமாக போருக்கான நேரம் வருவதற்கு முன்பே மாவீரன் சுல்தான் முஹம்மத் கி.பி 1481ம் ஆண்டு (ஹிஜ்ரி– 886) தனது 52ம் வயதில் திடீரென மரணமடைந்தார்.
(இன்னாலில்லாஹி...) சுல்தானின் மரணத்தை கேள்வியுற்ற ஐரோப்பியர் பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். ரோமின் போப், தேவாலயத்தில்  நன்றி செலுத்தும் பிரார்த்தனை மூலம் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தவும் ஆணையிட்டார்.

-Abdur Raheem.

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!